தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Updated on
1 min read

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால்ஜூன் 18-ம் தேதி கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதுடன், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளன.

எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரியதூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசனும், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in