

சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வை வரும் ஜூன் 25-ம் தேதி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்.19-ம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி.கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கம். பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3100 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பி.பொன்னையா அறிவுறுத்திருந்தார்.
இந்நிலையில், இத்திட்டத்தை ஜூலை மாதம் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை வரும் இம்மாதம் 25-ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஜூலை 5-ம் தேதிக்குள் பணியாணை வழங்கி, ஜூலை 10-ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் குறைவாக குடிசைகள் உள்ள 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு கட்டும் ஆணைகளை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.