Published : 31 May 2018 07:57 AM
Last Updated : 31 May 2018 07:57 AM

தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு மூலம் பணி நிரந்தரம்: உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தகவல்

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகம்தான் உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை தேசிய அளவில் 25.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 46.9 சதவீதமாக இருந்து வருகிறது. கடந்த 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை புதிதாக 65 அரசு கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 7 ஆண்டுகளில் 1,732 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 89 புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.

பின்னர் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் காவலர்கள், பெருக்குபவர்கள், துப்புரவாளர்கள் உள்ளிட்ட 586 பணியாளர்கள் வெளிமுகமை (அவுட்-சோர்சிங்) மூலம் நிரப்பப்படுவர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.400-லிருந்து ரூ.900 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட்-1-ல் 1,883 கவுரவ விரிவுரையாளர்களும், ஷிப்ட்-2-வில் 1,661 பேரும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் நீண்ட கால பணிஅனுபவத்தை கருத்தில்கொண்டு உதவி பேராசிரியர் பணிக்கு பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித்தகுதியை பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றிபெறும் விரிவுரையாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டு முறையான பணியிடத்தில் நியமிக்கப்படுவர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆங்கில விரிவுரையாளர்களின் ஆங்கிலம் கற்பிக்கும் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும். முதல்கட்டமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 50 ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x