தீவிரமடையும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டம்: வாழ்விடம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுக முடிவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் இரண்டு ஆண்டுகளாக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களுக்கான வாழ்விடம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுக முடிவு செய்துள்ளனர். இதற்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை வரும் ஜூன் 24-ம் தேி சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக ஏகனாபுரம் என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்புகள், நிலங்கள் என மொத்தமாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் சுமார் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களது போராட்டம் வரும் ஜூன் 24-ம் தேதி 700-வது நாளை எட்டுகிறது.

அதுவரை தீர்வுகிடைக்காவிட்டால் வாழ்வதற்கு தஞ்சம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுக போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர். ஆந்திர அரசிடம் தஞ்சம் கேட்டு சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஒரு குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை வழி அனுப்பி வைக்க 13 கிராம மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் வரும் 24-ம் தேதி ஏகனாபுரம் அம்பேத்கர் சிலையில் இருந்து புறப்படுகின்றனர். இவர்களை வழி அனுப்பி வைக்க பொதுமக்கள் அனைவரும் அந்த இடத்தில் வந்து கூடுமாறும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் ப.ரவிச்சந்திரன், ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோவிடம் கேட்டபோது, “பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இது தொடர்பாக தமிழக அரசு உள்பட பலரை சந்தித்து மனு அளித்துவிட்டோம். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில் வேறு வழியே இல்லாமல்தான் வாழ்வதற்கு தஞ்சம் கேட்டு ஆந்திர மாநில அரசை அணுக உள்ளோம்.

அதன் முதல்கட்டமாக வரும் ஜூன் 24-ம் தேதி சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி எங்கள் பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லையெனில் கண்ணீருடன் வெளியேறுவதை தவிர எங்களுக்கு வழியில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in