

சென்னை: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள்மீது, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலப் பிரச்னை தொடர்பாக, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா 2013 செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
7 பேருக்கு மரண தண்டனை: இது தொடர்பான வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மகன்கள் வழக்கறிஞர் பாசில், பொறியாளர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் மரண தண்டனை மற்றும் இரட்டை ஆயுள்தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பிலும், தண்டனையை உறுதி செய்யக் கோரிவிசாரணை நீதிமன்றம் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் மற்றும் வழக்கறிஞர் விவேகானந்தன் உள்ளிட்டோரும், அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜி. பிரபாகரனும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு அளிக்க உள்ளனர்.