Published : 20 May 2018 05:36 PM
Last Updated : 20 May 2018 05:36 PM
கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நல்ல தீர்ப்பை வழங்கியதின் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடியில் இன்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு டிடிவி தினகரன் இன்று சேலம் வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''உச்ச நீதிமன்ற உத்தரவால் கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. முதல்வராக எடியூரப்பாவை பதவியேற்க வைத்ததற்குப் பதிலாக ஓரிரு நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக ஆளுநர் எடியூரப்பாவை அறிவுறுத்தி இருக்கலாம்.
ஆனால் பதவியேற்ற ஓரிரு நாளிலேயே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது எனக் கருதி எடியூரப்பா தானாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நல்ல தீர்ப்பை வழங்கியதின் காரணமாகவே இது நடந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக மதச் சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரஸும் இணைந்து அங்கு ஆட்சியமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT