Last Updated : 25 Aug, 2014 12:00 AM

 

Published : 25 Aug 2014 12:00 AM
Last Updated : 25 Aug 2014 12:00 AM

50 ஆண்டுகளாக எம்.பி. அலுவலகம் இல்லாத வடசென்னை தொகுதி: கோரிக்கை மனு கொடுக்க முடியாமல் சிரமப்படும் மக்கள்

மறுவரையறை செய்யப்பட்ட வட சென்னை தொகுதியில் தற்போது திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ் ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதியில் 1977 முதல் 2009 வரை நடந்த 10 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் 2 தடவை போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அதிமுக, சமீபத்தில் நடந்த தேர்தலில் முதல்முறையாக வெற்றிக் கனியைப் பறித்துள்ளது.

வடசென்னை தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக எம்.பி. அலுவலகம் இல்லை. ஏதாவது கோரிக்கை மனு கொடுக்க வேண்டும் என்றால் எம்.பி. இருக்கும் இடத்தை தேடிக் கண்டு பிடித்து அங்கு சென்று கொடுக்க வேண்டியுள்ளது என்கின்றனர் வடசென்னைவாசிகள். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகளவில் வசிக்கும் இந்தத் தொகுதியில், அடிப்படை வசதிகள்கூட இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கம்.

கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும், இப்போதாவது தொகுதியில் எம்.பி. அலுவலகம் வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். ஆனால், தேர்தல் முடிந்து 3 மாதங்களாகியும் இன்னும் அதற்கான முயற்சி எதுவும் நடக்கவில்லை. அதிமுக எம்.பி. வெங்கடேஷ் பாபுவை ‘தேவை’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ சந்தித்து, தொகுதி அலுவல கம் கட்டுவதற்கு உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மனு கொடுத்தார். மனு கொடுத்து 2 மாதங் களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

இதுகுறித்து வடசென்னை தொகுதி முன்னாள் எம்.பி.யான டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக) கூறியதாவது:

எம்.பி. அலுவலகம் கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், சென்னை மாநகராட்சியிடம் ஏதாவது ஒரு இடத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டேன். அப்போது மின்ட் பஸ் நிலை யம் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் இடம் தருவதாகச் சொன்னார்கள். ஆட்சி மாறியதால், அந்த இடம் மாநகராட்சி இணை ஆணையருக்கு வேண்டும் என்று கூறிவிட்டனர்.

அதன்பிறகு, வியாசர்பாடி மண்டல அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கித் தருமாறு மாநகராட்சிக்கு கடிதம் எழுதினேன். அதைக் கொடுப்பதற்குள் எனது பதவிக்காலம் முடிந்துவிட்டது.

எனக்கு முன்பு எம்.பி.யாக இருந்த குப்புசாமிக்கு, பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரி அருகே இருந்த மாநகராட்சி வணிக வளாக மாடியில் இடம் கொடுத்தனர். அது, மக்கள் எளிதாக வந்து செல்லக்கூடிய இடமாக இல்லை. குறிப்பாக முதியவர் கள் வந்து செல்ல மிகவும் சிரமமாக இருந்ததால் அந்த இடம் அலுவலகமாகப் பயன்படுத்தப்படவில்லை.

அலுவலகம் இல்லாவிட்டாலும் மக்கள் என்னை எளிதாக சந்தித்து மனு கொடுத்தனர். நானும் மக்களை நேரில் சந்தித்தும், அண்ணா அறிவாலயத் திலும் மனுக்களைப் பெற்று உடனுக் குடன் நடவடிக்கை எடுத்தேன் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தற்போதைய அதிமுக எம்.பி. வெங்கடேஷ் பாபு விடம் கேட்டபோது, ‘‘வடசென்னை தொகுதி எம்.பி. அலுவலகத்துக்காக 3 இடங்களைத் தேர்வு செய்து மாநகராட்சியிடம் தெரிவித்துள்ளேன். அதில் ஒரு இடம் 10 நாட்களுக்குள் இறுதி செய்யப்பட்டுவிடும். அதையடுத்து எம்.பி. அலுவலகத்தை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x