மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் தொழிலாளர்கள் நலன் சார்ந்து நல்ல முடிவு: அப்பாவு தகவல்

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் தொழிலாளர்கள் நலன் சார்ந்து நல்ல முடிவு: அப்பாவு தகவல்
Updated on
1 min read

திருநெல்வேலி: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தில், தொழிலாளர்களின் நலன் சார்ந்து அரசு நல்ல முடிவைஎடுக்கும் என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரத்தில், தொழிலாளர்களின் நலன் சார்ந்து அரசு நல்ல முடிவை எடுக்கும். பல்லாயிரம் ஏக்கர் பரப்பு கொண்ட அந்தவனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே, வனத்துக்கும் நல்லது, நமக்கும் நல்லது. கேரள வனப் பகுதியில் தீவிரவாதிகள் பயிற்சி எடுத்ததாக தகவல் வந்துள்ள நிலையில், மாஞ்சோலையில் தொழிலாளர்கள் இருப்பதுதான் நமக்கும் நல்லது.

இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவாக, தேயிலைத் தோட்டத்தை கையகப்படுத்த முடிவெடுக்க வேண்டும். முழுமையாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்துப் பகுதிகளை வனத் துறையிடம் ஒப்படைப்பது சரியாக இருக்காது. அந்த வனப்ப குதி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள் அங்கே தொடர்ந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். மாஞ்சோலை விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். மாஞ்சோலையில் உள்ளதொழிலாளர்களுக்கு குடிநீர், மின்சாரம் இணைப்பை துண்டிக்க முடியாது. அப்படி துண்டித்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதற்கு வனத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், தமிழக அரசும், மாவட்டநிர்வாகமும் பக்தர்கள் செல்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே அரசு நலத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் நிறுத்தப்படும். இவ்வாறு பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in