Published : 11 Jun 2024 08:45 PM
Last Updated : 11 Jun 2024 08:45 PM

தமிழ் மொழித்தாள் தேர்வில் 40% பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு: மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே மற்ற விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும், அரசாணையை எதிர்த்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிதேஷ் என்பவர் உள்ளிட்ட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம், “தமிழக அரசின் அரசாணை காரணமாக ஆங்கில வழியில் படித்தவர்கள் பாதிக்கப்படுவர். ஏற்கெனவே தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கும்போது, தற்போதைய அரசாணை மூலம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நூறு சதவீத இடஒதுக்கீடு வழங்குவது போல் ஆகிவிடும்” எனக் கூறி ஆட்சேபம் தெரிவித்து வாதிட்டார்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணி நிபந்தனை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மொழிப்பாடத்தில் கண்டிப்பாக 40 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏற்கெனவே சில தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டது. தமிழகத்தில் அரசு ஊழியர்களாக பதவிக்கு வருபவர்கள், தமிழ் மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்பதால் அரசின் இந்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது,” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x