தென்காசி அரசு மருத்துவமனை வளாக பாழடைந்த கட்டிடத்தில் தீ விபத்து

தென்காசி அரசு மருத்துவமனை வளாக பாழடைந்த கட்டிடத்தில் தீ விபத்து

Published on

தென்காசி: தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு அந்தக் குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது.

இது தொடர்பாக ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன் கூறும்போது, "மருத்துவமனை நிர்வாகம் பாழடைந்த கட்டிடத்தில் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிக்கிறது. இதனால் அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், நலப் பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா ஆகியோரிடம் கேட்டபோது, “மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கழிவுகள் அனைத்தும் நாங்குனேரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மருத்துவமனையில் இதர கழிவுகள் திறந்த வெளியில் கொட்டாமல் பயன்பாடின்றி பாழடைந்து கிடக்கும் கட்டிடத்தில் கொட்டப்படுகிறது.

அவ்வப்போது நகராட்சி ஊழியர்கள் இந்தக் குப்பைகளை அகற்றுவது வழக்கம். இந்நிலையில், யாரோ அந்தக் குப்பையில் தீ வைத்துள்ளனர். இதனால் தீப்பற்றியுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இங்கு குப்பைகள் எதுவும் எரிக்கப்படுவதில்லை” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in