Published : 27 Apr 2014 11:12 AM
Last Updated : 27 Apr 2014 11:12 AM

வாக்காளருக்கு பணம் பட்டுவாடா புகார்: ஆ.ராசா மீது வழக்குப் பதிவு

வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாகக் கூறி அதிமுக-வினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா உள்ளிட்ட 50 பேர் மீது, திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 24-ம் தேதி வாக்குப் பதிவு நாளன்று, நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா, தனது தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் திருமுருகன்பூண்டி தேவராயம்பாளையம் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் சலீம் என்பவரது வீட்டுக்கு வந்தாராம். இதை அறிந்த திருமுருகன்பூண்டி அதிமுக நகரச் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில், ராசா தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டனர்.

அவர்களை ராசாவுடன் வந்தவர்கள் கீழே தள்ளிவிட்டு மிரட்டியதாகத் தெரிகிறது. இதில், அதிமுக உறுப்பினர்கள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் பணியில் இருந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்ததாக, திருமுருகன்பூண்டி அதிமுக நகரச் செயலாளர் விஸ்வநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில், திமுக நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா, அவிநாசி திமுக ஒன்றியச் செயலாளர் சாமிநாதன், திருமுருகன்பூண்டி திமுக நகரச் செயலாளர் குமார் உள்ளிட்ட 50 பேர் மீது அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x