Published : 09 Jun 2024 08:59 AM
Last Updated : 09 Jun 2024 08:59 AM

81 சட்டப்பேரவை தொகுதிகளில் 2-ம் இடம்: தமிழகத்தில் வாக்கு வங்கியை உயர்த்திய பாஜக!

சென்னை: தமிழகத்தில் வாக்கு வங்கியை உயர்த்திய பாஜக, 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. ஆனால், கடந்த தேர்தல்களை விட பாஜக இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட்டதன் காரணமாகவும், அண்ணாமலையின் பிரச்சாரத்தாலும் பாஜகவுக்கு வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. போட்டியிட்ட 23 தொகுதிகளில் 8 மக்களவைத் தொகுதிகளில் 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

வாக்கு சதவீதமும், 11.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. சட்டப்பேரவை தொகுதி வாரியாக பார்க்கும் போது திமுக கூட்டணி 221 சட்டப்பேரவை தொகுதிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.எடப்பாடி, திருமங்கலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்ககிரி, பரமத்தி - வேலூர், குமார பாளையம், அரியலூர், ஜெயங்கொண்டம், அருப்புக்கோட்டை ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக கூட்டணியும், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம் தொகுதிகளில் பாமகவும் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

பாஜக எந்தவொரு சட்டப்பேரவை தொகுதியிலும் முதல் இடத்தை பிடிக்கவில்லை என்றாலும், ஏராளமான தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் 2,90,683 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளரான ஜெயவர்தனை பின்னுக்குத்தள்ளி 2-ம் இடத்தை பிடித்தார். மேலும், தென்சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று திமுகவுக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தை பாஜக பிடித்திருக்கிறது.

இதேபோல், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 1,69,159 வாக்குகளைப் பெற்று 2-ம்இடம் பிடித்துள்ளார். இந்த தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு,அண்ணாநகர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதியிலும் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளரைவிட அதிக வாக்குகளை பாஜக பெற்றிருக்கிறது.

வடசென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் 1,13,318 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்திருந்தாலும், முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் 2-ம் இடத்தை பாஜக கைப்பற்றி இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் 13 இடங்களில் பாஜக 2-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இதேபோல், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை பின்னுக்குத் தள்ளி பாஜக வேட்பாளர் பொன் வி.பாலகணபதி 2-ம் இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்த தொகுதியில், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 2-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இதேபோல், கோவை, நெல்லை உட்பட தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பல மாவட்டங்களில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக 2-ம் இடத்தை பிடித்துஅதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அந்தவகையில், 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக தமிழகத்தில் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

இதன்மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்துக்கு பாஜக வந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. எனவே, வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு கடும் போட்டியை பாஜக கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x