நெல்லை காங்., நிர்வாகி கொலை வழக்கு: தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை

தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை
தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை
Updated on
1 min read

திருநெல்வெலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரின் சந்தேக மரணம் பற்றி இன்று (வெள்ளிகிழமை) திசையன்விளை அருகே அவரது தோட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரை சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவர் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தனது வீட்டின் தோட்டத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.

இதையடுத்து இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 11 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து ஜெயக்குமாரின் உறவினர்கள் நண்பர்கள் தெரிந்த நபர்கள் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஜெயக்குமார் எப்படி இறந்தார் என உறுதியான தகவல் தெரியாததால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிசிஐடி ஆய்வாளர் உலக ராணி தலைமையில் வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ்குமார் உள்ளிட்ட 15 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த வழக்கின் விசாரணையைக் கையிலெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து 32 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. அதேபோல் ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்களையும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை சிபிசிஐடி போலீஸாருடன் 35-க்கும் மேற்பட்ட தடவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஜெயக்குமாரின் தோட்டம் மற்றும் அவரது வீடு இருக்கும் பகுதிகளில் ஏதேனும் தடயங்கள் சிக்குகிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in