அனைத்து நோயாளிகளின் காப்பீடு விவரம் பதிவு செய்ய மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

அனைத்து நோயாளிகளின் காப்பீடு விவரம் பதிவு செய்ய மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் அனைத்து நோயாளிகளின் காப்பீட்டு விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் தகவல் தொழில்நுட்பச் செயலர் டாக்டர் பி.ஸ்ரீனிவாஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் நிலையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருவோருக்கு மருத்துவமனை சார்பில் வழங்கப்படும் பதிவு எண்ணுடன் சேர்த்து ஆயுஷ்மான் பாரத் அடையாள எண்ணையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

அந்த விவரங்கள் அனைத்தும் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கும்போது தணிக்கை செய்யப்படும். எனவே, உள்நோயாளிகள், புறநோயாளிகள் அனைவரும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அடையாள எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளையில், ஆயுஷ்மான் பாரத் எண் இல்லாவிட்டால், அதனைக் காரணமாக வைத்து சிகிச்சை வழங்க மறுக்கக் கூடாது” என அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் வழங்கப்படுவதால், மாநில அரசின் காப்பீட்டு எண்ணை வழங்கினால் போதுமானது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in