

சென்னை: பணிக்காலத்தில் 10-க்கும் மேற்பட்ட விபத்தை ஏற்படுத்திய 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக எம்டிசி மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அனைத்து மண்டல மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிக்காலத்தில் 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுத்திய 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க பரிசோதனை செய்ய ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நாளொன்றுக்கு 33 ஓட்டுநர்கள் வீதம் 10 நாட்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
இதில் 5 மருத்துவர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு கண், காது, எலும்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு, தொண்டை, பொது மருத்துவ பரிசோதனை மற்றும் மனநல பரிசோதனை ஆகியவை செய்யப்படும். இதில் ஓட்டுநர்களுக்கு பரிசோதனைக்குப் பிறகு தேவைப்பட்டால் மேல் பரிசோதனையும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 334 பணியாளர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அந்தந்த பணிமனைகளில் இருந்து குறிப்பிட்ட தேதியில் தவறாமல் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பவும், அன்றைய தினம் மட்டும் வருகைப் பதிவு வழங்கவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழக தரவுகளின்படி, அண்ணாநகர் பணிமனையில் அதிகபட்சமாக 24 ஓட்டுநர்கள் 10-க்கும் மேற்பட்ட விபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.