Published : 28 Aug 2014 11:07 AM
Last Updated : 28 Aug 2014 11:07 AM

சட்டையில் சேற்றுநீரை தெளித்து ரூ.2 லட்சம் திருட்டு

சென்னை புதுவண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் வைர மணி. இவர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவர் செவ்வாய்கிழமையன்று பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் பணம் எடுத்தார். பணத்தை தனது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர், உங்கள் சட்டையில் கீரீஸ் ஒட்டி இருக்கிறது என்று கூறினார். வைரமணி சிறிது தூரம் சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இன்னொரு நபர், உங்கள் சட்டையில் சேற்று நீர் உள்ளது என்று கூறியுள்ளார். உடனே அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருந்த டீக்கடையில் தண்ணீர் வாங்கி சேற்று நீரைக் கழுவினார். இந்த இடைவெளியில் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

ரூ.1 லட்சம் அபேஸ்

வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருபவர் வசந்த் (40). செவ்வாய்க்கிழமை காலையில் இவரிடம் போனில் பேசிய நபர், தன்னிடம் ரூ.1 லட்சம் சில்லறை நாணயங்கள் இருப்பதாகவும், சவுகார்பேட்டை தங்கசாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்திற்கு ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்து கொடுத்து சில்லறை நாணயங்களை பெற்று கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.

இதை நம்பிய வசந்த் ரூ.1 லட்சம் பணத்துடன் வணிக வளாகத்துக்கு சென்றார். அங்கிருந்த மர்ம நபரிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட அவர் உள்ளே சென்று சில்லறை எடுத்து வருவதாக கூறி மாயமாகி விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x