Published : 10 Apr 2018 08:05 AM
Last Updated : 10 Apr 2018 08:05 AM

காவிரி போராட்டம் தமிழர் உரிமைக்கானது: நல்லகண்ணு கருத்து

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம் என்பது மத்திய அரசுக்கு எதிரானது அல்ல. அது தமிழகத்தின் உரிமைக்கான போராட்டம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று தேனி வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக, கட்சி பேதமின்றி தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசியல் காரணங்களுக்காக போராட்டங்களை நடத்துவதாக பாஜகவினரும், தமிழக ஆளுங்கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர். மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராட்டம் நடத்துகின்றனர். எனவே இதனை வெறும் அரசியலுக்கான போராட்டம் என்று மட்டும் கூறுவது கண்டிக்கத்தக்கது.

இது மத்திய அரசுக்கு எதிரான போராட்டமும் அல்ல. தமிழர்களின் உரிமைக்கான போராட்டம். 17 ஆண்டுகளுக்கு முன் வெளியான காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிலும் தீர்வு கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் தீர்வு கிடைக்கவில்லை. 7 கோடி தமிழர்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படாமல், கர்நாடக தேர்தலை மட்டுமே நோக்கமாக கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக மறுத்து வருகிறது.

நியூட்ரினோ திட்டம் வந்தால் இயற்கை வளம் அழியும். இங்கு நியூட்ரினோ ஆய்வு மையத்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும்.

தமிழ்நாட்டுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை கல்வி நிலையங்களில் தலைமை பொறுப்பில் நியமித்து வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x