Published : 10 Apr 2018 07:14 PM
Last Updated : 10 Apr 2018 07:14 PM

ஐபிஎல் வர்ணனையாளர் வேலையைத் துறந்தது ஏன்?- வைரலாகி வரும் ஆர்.ஜே.பாலாஜியின் வீடியோ

 

ஐபிஎல் வர்ணனையாளர் வேலையைத் துறந்தது ஏன் என்று ஆர்.ஜே.பாலாஜி வீடியோ பதிவில் விளக்கம் அளித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக ட்விட்டரில் இன்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

''காவிரி மேலாண்மை வாரியம அமைக்கக் கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், இன்று ஐபிஎல் மேட்ச்சில் நான் செய்ய வேண்டிய என் வர்ணனையாளர் வேலையைச் செய்யவில்லை. ஒரு தமிழனாக என் பங்களிப்பு இது. இந்த முடிவை நான் சார்ந்திருக்கும் நிர்வாகத்திற்கு சொல்லும்போது என் உணர்வுக்கும், என் மக்கள் உணர்வுக்கும் மதிப்பளித்தனர். அவர்களுக்கு என் நன்றி.

இந்த நேரத்தில் சில விஷயங்களைச் சொல்ல நினைக்கிறேன். ஐபிஎல் மேட்ச் நாம் பார்க்கக்கூடாது என்று கொஞ்ச நாளைக்கு முன்பு சொன்னார்கள். பிறகு, மைதானத்தில் பார்க்க வேண்டாம், டிவியில் பார்க்கலாம் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு ஐபில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து போராட வேண்டும் என்றார்கள். இப்போது ஐபிஎல் போட்டியே நடக்கக்கூடாது என்கிறார்கள். மேலும், போட்டி நடக்கிறதோ, இல்லையோ என்னை மாதிரி ஆட்கள் அதில் வேலை செய்யக்கூடாது என்று சொன்னார்கள். இது எல்லாமே எதற்கு என்றால் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் என்கிறார்கள். இது சரியா என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால், இப்போதிருக்கும் நிலைமை பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரியாதா? அப்படியே கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றாலும் 234 எம்.எல்.ஏக்களையும், 40 எம்.பி.க்களையும் ஓட்டு போட்டு அனுப்பி வைத்திருக்கிறோம். அதனால், நாட்டின் மொத்த கவனத்தையும் பெற வேண்டுமென்றால் 234 எம்.எல்.ஏக்களும், 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்யலாம். எல்லோருமே ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று திரும்பிப் பார்ப்பார்கள்.

உடனே தேர்தல் அறிவிப்பார்கள் என்றால், அந்தத் தேர்தலில் யாரும் நிற்காதீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைக்கும் தேர்தலில் நிற்கமாட்டோம் என்று போராடினால் அது சரியாக இருக்கு. ஏனெனில் நாம் ஓட்டு போட்டது இவர்களுக்குத்தான். தோனிக்குக் கிடையாது.

நான் தனிமனிதனாகவும், என் நண்பர்களுடன் இணைந்தும் திருநெல்வேலி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5 ஏரி, குளங்களைத் தூர் வாரி இருக்கிறோம்.

சிலர் ஆதாயத்துக்காக இதைப் பெரிதாக்குகிறார்கள். அதற்காக இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இளைஞர்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டு தீர்வை நோக்கிப் போராட வேண்டும்'' என்றார் ஆர்.ஜே.பாலாஜி.

வீடியோ பதிவு:

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x