Published : 03 Apr 2018 07:34 AM
Last Updated : 03 Apr 2018 07:34 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவசரமாக டெல்லி விரைந்துள்ளார். மத்திய அரசு அழைப்பின் பேரில் சென்றுள்ள அவர், தமிழக நிலவரம் குறித்து அறிக்கை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. வணிகர் சங்க பேரமைப்பு, ஹோட்டல்கள் சங்கம், மருந்து விற்பனையாளர்கள் சங்கம், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
ஆளும் கட்சியான அதிமுகவும் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறது. திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வரும் 5-ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித் துள்ளனர்.
இதேபோல தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் கடந்த 50 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. நியூட்ரினோ திட்டத்துக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் மாலை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். வழக்கமான சட்டம், ஒழுங்கு குறித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், தமிழக சூழல் குறித்த முழுமையான அறிக்கையை ஆளுநர் கேட்டுப் பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசிடமிருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேற்று மாலை திடீரென அழைப்பு வந்தது. இதையடுத்து, மாலை 6.45 மணிக்கு அவர் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை அவர் இன்று சந்திக்க உள்ளதாகவும், அப்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், காவிரி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய அரசிடம் ஆளுநர் அறிக்கை அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு உத்தரவு
இதற்கிடையே சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:
நாட்டில் நடக்கும் போராட்டங்கள், முழு அடைப்புகளால் எழுந்துள்ள சூழலை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டும் வருகிறது. மத்தியப் படை உதவியை எந்த மாநிலம் கோரினாலும், அங்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அதிவிரைவுப் படைகள், மத்திய ஆயுதக்காவல் படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொது அமைதியை நிலைநாட்டுவதுடன், மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT