

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கார் காணாமல் போனது. காரை திருடிச்சென்ற டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா திருமணமாகி மனைவியுடன் சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.
இவரது மனைவியின் பயன்பாட்டுக்காக ஆடி ஏ-6 உயர் ரக கார் ஒன்றை வைத்துள்ளனர். கார் ஓட்டுவதற்கு நவாஸ்கான் சாதிக்(34) என்கிற ஓட்டுநரை நியமித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக யுவன்ஷங்கர் ராஜா மதுரை சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவியும் உறவினர்களும் இருந்துள்ளனர். நேற்று மாலை 5-00 மணி அளவில் ஓட்டுநர் நவாஸ் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால் இரவுவரை திரும்ப வரவில்லை. போன் செய்தபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. காருடன் ஓட்டுநர் நவாஸ் தலைமறைவானது தெரிய வந்தது.
இதையடுத்து இரவு 1-00 மணி அளவில் யுவன்ஷங்கர் ராஜா சார்பில் நாகராஜ் என்பவர் கார் திருட்டு போனது குறித்து எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காருடன் தலைமறைவான ஓட்டுநர் நவாஸ்கான் சாதிக்கை போலீஸார் தேடி வருகின்றனர்.