Published : 26 Apr 2018 07:47 AM
Last Updated : 26 Apr 2018 07:47 AM

குப்பை கிடங்குகளில் உணவை தேடி பிளாஸ்டிக் பைகளை தின்பதால் இலங்கையில் தொடரும் யானைகள் உயிரிழப்பு; ஒரே மாதத்தில் 6 யானைகள் இறந்ததால் அதிர்ச்சி

இலங்கையில் வனத்தையொட்டி உள்ள குப்பைக் கிடங்குகளுக்கு உணவைத் தேடி வரும் யானைகள், பாலிதீன் பைகளையும் சேர்த்து சாப்பிடுவதால் உயிரிழக்கின்றன. நேற்று வரை ஒரு மாதத்தில் 6 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 2011-ம் ஆண்டு வனத்துறை எடுத்த கணக்கெடுப்பின்படி 5,800 யானைகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 100 யானைகள் பிறக்கின்றன. 2012 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான 5 வருடங்களில் 1,171 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 104 யானைகள் மட்டும்தான் இயற்கையாக மரணமடைந்துள்ளன.

200 யானைகள் வேட்டை

இலங்கையில் யானைகளை வேட்டையாடியது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. அப்படியிருந்தும், துப்பாக்கிச் சூடு, பொறி வைத்து பிடித்தல், விஷம் வைத்து கொல்வது போன்ற செயல்களால் ஆண்டுக்கு 200 யானைகள் கொல்லப்படுகின்றன.

இந்நிலையில், காடுகளின் பரப்பளவு குறைந்து வருவது காரணமாக போதிய உணவு கிடைக்காமல் காட்டைவிட்டு வெளியேறும் யானைகள் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு வருவது அதிகரித்து வருகிறது.

குப்பைகளில் உணவு தேடல்

அதோடு, வனப் பகுதிகளின் அருகே கொட்டப்பட்டும் குப்பைகளில் உணவைத் தேடி ஏராளமான யானைகள் வரத் தொடங்கியுள்ளன. இதுபோன்று 54 குப்பை கொட்டும் இடங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ளது. இங்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட யானைகள் வருகின்றன. இந்த குப்பைகளில் உள்ள உணவை சாப்பிடும் யானைகள், அதனுடன் சேர்த்து பாலிதீன் பைகள் போன்ற ஜீரணமாகாதவற்றையும் உண்கின்றன. இவற்றால் பல யானைகள் உயிரிழந்து வருகின்றன.

இதைத் தடுக்க, குப்பை கிடங்குகளுக்குள் யானைகள் செல்ல முடியாத வகையில் குறைந்த அளவு வோல்டேஜ் உள்ள சூரிய மின்வேலிகளை அமைக்க இலங்கை நாடாளுமன்றம் கடந்த 2017 ஆண்டு ஒப்புதல் வழங்கியது. அம்பாறை மாவட்டம் கல்முனை, அக்கறைப்பற்று, சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், வனத்தையொட்டி உள்ள தீகவாபி பகுதியில் கொட்டப்படுகின்றன. இங்கு யானைகள் வருவதைத் தடுக்க பாதுகாப்பு மின்வேலி அமைக்கப்பட்டது. ஆனால், அவற்றை முறையாக பராமரிக்காததால், சேதமடைந்துவிட்டது. இதனால், ஏராளமான யானைகள் உணவுக்காக தினந்தோறும் வருகின்றன.

இந்நிலையில், தீகவாபி குப்பைக் கிடங்கில் உணவு சாப்பிட்ட 6 யானைகள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தன. ஒரே சமயத்தில் அடுத்தடுத்து யானைகள் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள், காடுகளை விட்டு வெளியே வராதபடி அவற்றுக்கு அங்கேயே உணவு, தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x