Published : 06 Apr 2014 10:24 AM
Last Updated : 06 Apr 2014 10:24 AM

5 கிலோ காஸ் விற்பனை நாளை தொடங்குகிறது

மானியம் இல்லாத 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை, தேனாம்பேட்டை டி.யு.சி.எஸ். மையத்தில் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

சென்னை உள்பட நாடு முழுவதும் 5 பெரு நகரங்களில் 5 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத காஸ் சிலிண்டரை விற்பனை செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் இந்த ரக சிலிண்டர்களை விற்பதற்கு 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தேனாம்பேட்டை டி.யு.சி.எஸ். கூட்டுறவு விற்பனை நிலையம், ஆழ்வார்பேட்டை ஸ்ரீநவநீதம் லட்சுமி நிலையம் மற்றும் அடையாறு இந்தியன் காஸ் விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் 5 கிலோ சிலிண்டர்கள் விற்கப்பட உள்ளது.

முதல்கட்டமாக தேனாம்பேட்டை டி. யு.சி.எஸ். கூட்டுறவு மையத்தில் நாளை (திங்கள்கிழமை) முதல் இந்த சிறிய சிலிண்டர் விற்பனை தொடங்கப்படுகிறது. சிறிய சிலிண்டர் கேட்டு, டி.யு.சி.எஸ். மையத்தில் வெள்ளிக்கிழமை வரை 10 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதுகுறித்து டி.யு.சி.எஸ். அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டி.யு.சி.எஸ். மையத்துக்கு 100 சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். சிலிண்டர்கள் திங்கள்கிழமை மையத்துக்கு வந்துவிடும். அவை உடனடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்’’ என்றார்.

சென்னையில் செயல்படவுள்ள 3 மையங்களில் ஏதேனும் ஒன்றில் ரூ.1600 செலுத்தி மானியம் இல்லாத சிலிண்டர்களை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம். காஸ் தீர்ந்து விட்டால் தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை நிலையத்தில் ‘ரீ- பில்’ செய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x