Published : 03 Apr 2018 07:46 AM
Last Updated : 03 Apr 2018 07:46 AM

தொடர் போராட்டங்கள் எதிரொலி: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு- போலீஸுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ஒருவர் மீது வழக்கு

மெரினா, பெசன்ட் நகர் கடற்பரப்பில் போலீஸார் நேற்று 2-வது நாளாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். காவல்துறைக்கு எதிராக சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியதாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், வணிகர் அமைப்பினர், பொது மக்கள் என பல தரப்பினர் போராடி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை மெரினாவில் 5 பெண்கள் உட்பட 18 பேர் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்த போலீஸார் இரவோடு இரவாக அனைவரையும் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து அன்று இரவு 11.30 மணி அளவில் 2 பெண்கள் உட்பட 12 பேர் பெசன்ட் நகர் கடற்பரப்பில் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கடற்கரையில் மீண்டும் போராட்டம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக மெரினா உட்புறச்சாலை மூடப்பட்டது. காலை நேரத்தில் கடற்கரையில் நடைபயிற்சி செல்லக்கூட போலீஸார் யாரையும் அனுமதிக்கவில்லை. வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் ஏராளமான வாகனங்கள் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்தன.

போராட்டக்காரர்கள் யாரும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் நுழைந்து போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக தற்காலிக கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதன் மீது நின்றவாறு தொலை நோக்கிக் கருவி மூலம் கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். நேற்றும் இரண்டாவது நாளாக போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் வாட்ஸ்-அப்பில் தமிழ்நாடு காவல்துறைக்கு எதிராக கருத்துகளைப் பரப்பி காவல்துறையின் மீது உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக செந்தில் குமார் என்பவர் மீது சாஸ்திரி நகர் போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x