Published : 07 Apr 2018 07:37 AM
Last Updated : 07 Apr 2018 07:37 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உட்பட 3 ஆயிரம் பேர் மீது 3 பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் எதிர் கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கடற்கரையை நோக்கி ஊர்வலம்
மறியலைத் தொடர்ந்து மெரினா கடற்கரையை நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உட்பட 3 ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கம் அருகே எதிர்கட்சிகள் ஊர்வலமாக சென்றபோது போலீஸார் இரும்பு தடுப்புகளை (பேரிகார்ட்) அமைத்திருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை மீறி ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் கற்களால் தாக்கியதில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் குமார் மற்றும் ஆயுதப்படை காவலர் முருகன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது வன் முறையில் ஈடுபடுவது, திட்டமிட்ட தாக்குதல், ஆயுதங்களால் தாக்குவது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT