Published : 04 Apr 2018 11:37 AM
Last Updated : 04 Apr 2018 11:37 AM

மதுரையில் 2 குழந்தைகளை கொன்று தாய் விஷம் குடித்து தற்கொலை

மதுரையில் இரு குழந்தைகளை கொன்ற தாய், தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை பழங்காநத்தம் கணபதி நகர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி. கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு புவனேஷ்வரி (9),தனலட்சுமி (7), முருகேஷ்வரி (5) ஆகிய 3 மகள்கள், விஜய்கணேஷ் என்ற 8 மாத குழந்தை இருந்தனர். மூர்த்தி தனது பெற்றோர், தங்கை ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார். இவரது சொந்த ஊர் எட்டயபுரம். நேற்று வழக்கம்போல் மூர்த்தி திருமங்கலத்துக்கு பணிக்கு சென்றுவிட்டார். இவரது தந்தை பாலு பழங்காநத்தம் பகுதியிலுள்ள ஒரு டீக்கடைக்கும், தாயார் வீட்டு வேலைக்கும், தங்கை கல்லூரிக்கும் சென்றனர். இரு குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்ற நிலையில், எஞ்சிய இரு குழந்தைகளுடன் பிரியா மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று மதியம் பாலு மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார். அப்போது, பிரியா, முருகேஷ்வரி, விஜயகணேஷ் ஆகியோர் இறந்து கிடந்தனர். இதைக் கண்டதும் பாலு மகனுக்கு தகவல் கொடுத்தார்.

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட போலீஸார் அங்கு விரைந்தனர். விசாரணையில், பிரியா தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.

போலீஸார் கூறும்போது, `கணவருக்குத் தெரியாமல் சிலரிடம் பிரியா கடன் வாங்கியதாகவும், இதுபற்றி கணவர் கேட்டதால் பிரச்சினை ஏற்படுமோ என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், தற்கொலைக்கு வேறு காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம்’ எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x