Published : 26 May 2024 06:08 AM
Last Updated : 26 May 2024 06:08 AM

துறை செயலர்கள் பேச்சுவார்த்தை எதிரொலி: முடிவுக்கு வந்த போக்குவரத்து ஊழியர் - காவலர் மோதல்

சென்னை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் சென்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்க கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுவதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் 2 நாட்களாக அபராதம் விதித்தனர்.

இந்தத் தொகையை தங்களதுபணத்தில் இருந்து செலுத்த வேண்டியிருப்பதாக பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முதல்வர், போக்குவரத்து துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு தொழிற்சங்கத்தினர் தரப்பில் கடிதமும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் உள்துறைச் செயலர் பி.அமுதா, போக்குவரத்துத் துறைச்செயலர் க.பணீந்திர ரெட்டி உள்ளிட்டோர் சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டது.

இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்துக் கழக உயர்நிலை அதிகாரிகளுக்கு துறை சார்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, காவலர்களின் பயணச்சீட்டு விவகாரத்தில் வாரண்ட் இருந்தால் கட்டணமில்லாமல் வழக்கம்போல பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற நடைமுறையையே கடைப்பிடிக்க வேண்டும். பேருந்துகளில் எந்தவித குறைபாடுமின்றி கவனிப்பதோடு, விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல், போக்குவரத்து காவல்துறையினரும் தனிப்பட்ட முறையில் அபராதம் விதிக்க வேண்டாம் எனவும் வாரண்ட் வைத்திருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும் எனும் நடைமுறையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் இருதரப்புக்குமான மோதல் போக்கு முடிவுக்கு வரும் என தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நட்பான நடத்துநரும் காவலரும்: நாங்குநேரி சம்பவத்தில் தொடர்புடைய காவலர் ஆறுமுகபாண்டி மற்றும் நடத்துநர் சகாயராஜ் ஆகியோர் இருவரும் பரஸ்பரம் சமாதானமாக தேநீர் அருந்தி பேசிக் கொள்ளும் வீடியோவும் நேற்று வெளியானது. இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x