Last Updated : 26 May, 2024 12:32 AM

 

Published : 26 May 2024 12:32 AM
Last Updated : 26 May 2024 12:32 AM

சிலந்தி ஆறு தடுப்பணை | கேரள அரசை கண்டித்து முற்றுகைப் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

கோவையில் விவசாயிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, அதன் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். படம்: ஜெ.மனோகரன். 

கோவை: கேரள அரசை கண்டித்து வரும் 13-ம் தேதி சின்னாறு சோதனைச்சாவடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக்கூட்டம் கோவை காந்திபுரத்தில் உள்ள ஹோட்டல் அரங்கில் மே 25 நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கி விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் காவிரி, பாலாறு, சிறுவாணி, அமராவதி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கிது. இதை தமிழக அரசு தட்டிக்கேட்க தயங்கி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பவானி ஆற்றின் தடுப்பணைகளை கேரள அரசு கட்டியது. பின்னர், விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக அது தடுத்து நிறுத்தப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கடந்த பிப்ரவரி மாதம் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் ஒப்புதலோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கூறியுள்ளார். அதற்கு தமிழக முதல்வர் இதுவரை பதில் தெரிவிக்கவில்லை.

அதுபோன்று முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு அங்கு புதிய அணையை கட்ட கேரள அரசு மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பம் அளித்துள்ளது. அதற்கு ஒரு தனிக்குழுவையும் மத்திய அரசு நியமித்துள்ளது. அதுபோன்று தற்போது அமராவதி அணைக்கு தண்ணீர் வரும் சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுகிறது. இப்படி தமிழகத்துக்கு வரும் ஒவ்வொரு நீராதாரங்களும் பறிபோய் வருகிறது. இதை திமுக அரசு தடுத்து நிறுத்தவில்லை. இது தொடர்பாக முதல்வர் மவுனம் சாதித்து வருகிறார்.

எனவே, தமிழக நீராதாரங்களை பாதிக்கும் வகையில் செயல்படும் கேரள அரசை கண்டித்து வருகிற 13-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணாறு செல்லும் சாலையில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். அத்துடன் கொங்கு மண்டல நீர் ஆதாரஉரிமை மீட்புக்குழுவையும் ஏற்படுத்தி, இப்போராட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளோம்.

அதற்கு முன்பு முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசை கண்டித்து மதுரை வருமானவரித்துறை அலுவலகத்தை வரும் 28-ம் தேதி முற்றுகையிட உள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x