Last Updated : 01 Aug, 2014 09:10 AM

 

Published : 01 Aug 2014 09:10 AM
Last Updated : 01 Aug 2014 09:10 AM

ஸ்டாலின், உதயநிதி மீதான வழக்கில் தமிழக அரசு மனு தள்ளுபடி

நில அபகரிப்பு தொடர்பாக திமுக பொருளாளர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மீது தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மு.க.ஸ்டாலினும் உதயநிதியும் சேர்ந்து வேணுகோபால் ரெட்டி என்பவரை மிரட்டி சொத்து வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் சமரசமாக முடித்துக் கொள்ளப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், என்.வி.ரமணா ஆகியோர் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

ஸ்டாலின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, ‘இது அரசியல் ரீதியான வழக்கு. ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தவர். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், பாதிக்கப்பட்டவர் விலகிவிட்ட நிலையிலும், தமிழக அரசு சார்பில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘பாதிக்கப்பட்டவர் வாபஸ் பெற்றுக் கொண்டாலும் சொத்து அபகரிப்பு, மிரட்டல் ஆகிய குற்றத்தன்மை இருப்பதால் வழக்கை வாபஸ் பெற முடியாது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,’ என்று வாதிட்டார்.

ஸ்டாலின் வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, ‘இந்த சொத்து விற்பனையில் தொடர்புடையவர்களுக்கு மத்தியில் சுமூக முடிவு ஏற்பட்டு வழக்கில் இருந்து விலகிக் கொண்ட நிலையில் தமிழக அரசு வேண்டுமென்றே வழக்கு தொடர்வது தேவையற்றது,’ என்று வாதிட்டார்.

இருதரப்பையும் விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினையை முடித்துக் கொண்ட பின் வழக்கைத் தொடர்வது வீண் செயல் என்று கூறி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x