குன்னூரில் 64-வது பழக் கண்காட்சி தொடக்கம்: களைகட்டியது சிம்ஸ் பூங்கா

குன்னூரில் 64-வது பழக் கண்காட்சி தொடக்கம்: களைகட்டியது சிம்ஸ் பூங்கா

Published on

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 64-வது பழக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா இன்று (மே.24) தொடங்கி வைத்தார். இதை முன்னிட்டு குழந்தைகளை கவரும் விதமாக 5 டன் அளவிலான பழங்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைத்திருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை பகுதிகளில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், கோடை விழாவில் இறுதி நிகழ்ச்சியான 64-வது பழக்கண்காட்சி இன்று (மே 24) தொடங்கியது. இது 3 நாட்கள் நடைபெறுகிறது.

5 டன் அளவிலான திராட்சை, சாத்துகுடி, எலுமிச்சை, பேரீச்சம் பழங்களைக் கொண்டு கிங்காங் குரங்கு, மிக்கிமவுஸ், டைனோசர், வாத்து, நத்தை போன்ற உருவங்களை செய்திவைத்திருப்பது சுற்றுலாப் பயணிகளை குறிப்பாக, குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதுமட்டுமல்லாது தோட்டக்கலைத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களின் அரங்குகளும் பழக் கண்காட்சியில் அமைக்கபட்டுள்ளன. இதில், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், நாமக்கல், கரூர், மதுரை திருச்சி, பெரம்பலூர், கோயமுத்தூர் மாவட்டங்களில் விளையக்கூடிய பழங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. இதுவும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

பழக்கண் காட்சியை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ் பூங்கா சுற்றுலாப் பயணிகளின் வருகையால் களைகட்டியுள்ளது. வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும் பழக்கண்காட்சி, சிம்ஸ் பூங்கா தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இந்த ஆண்டு 3 நாட்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in