Last Updated : 23 May, 2024 04:12 PM

 

Published : 23 May 2024 04:12 PM
Last Updated : 23 May 2024 04:12 PM

ஒற்றை யானை விரட்டியதில் கீழே விழுந்து பாரதியார் பல்கலை. காவலாளி உயிரிழப்பு @ கோவை

பாரதியார் பல்கலை. வளாகத்தில் ஒற்றை யானை விரட்டியதில் கீழே விழுந்து காவலாளி சண்முகம் உயிரிழந்தார்.

கோவை: பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஒற்றை யானை விரட்டியதில் கீழே விழுந்து காவலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மருதமலை அடிவாரப் பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி. காலனி, கல்வீரம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிவது வழக்கம். இந்நிலையில் சோமையாம்பாளையம், மருதமலை அடிவார பகுதியில் இருந்து நேற்று (மே 22) இரவு 13 யானைகள் வனத்தை விட்டு வெளியேறியது. இதுகுறித்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு முன்னதாக அந்த யானைகளை வனத்துறையினர் வனப் பகுதிக்குள் விரட்டி விட்டனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைகழக பகுதியில் இன்று காலை ஒற்றை யானை ஒன்று முகாமிட்டிருந்தது. அந்த யானை பல்கலைக்கழகத்தின் பின்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை குடிக்க வந்துள்ளது. அப்போது பல்கலைக்கழகத்தில் இருந்த காவலாளிகள் இருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானையை விரட்டியுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஒற்றை யானை, காவலாளிகளை நோக்கி ஓடி வந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த காவலாளிகள் இருவரும் ஓடியுள்ளனர். அப்போது சண்முகம் (57) என்ற காவலாளி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய வனத்துறையினர், “பாரதியார் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை அருகே புதர் பகுதியில் யானை இருப்பதாக அறிந்த காவலாளிகள் அங்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, புதரில் மறைந்திருந்த யானை காவலாளிகளை துரத்தியுள்ளது. இருவரும் தப்பி ஓடும்போது தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சண்முகம் உயிரிழந்தார். மற்றொரு காவலாளி சுரேஷ்குமாரும் காயமடைந்துள்ளார்.

பாரதியார் பல்கலைக்கழகப் பகுதியில் யானைகள் உள்ளதா என்று தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு தணிக்கை செய்யப்படுகிறது. பாரதியார் பல்கலைக்கழகம் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் வன விலங்குகளிடமிருந்து பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி ஏற்கெனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர். இதனிடையே, பல்கலைக்கழக பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை பட்டாசு வெடித்து துரத்தும் பணியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x