நெல்லை ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Published on

நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 10 தனிப்படைகள் மேற்கொண்டு வரும் விசாரணையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூரை சேர்ந்த ஜெயக்குமார் தனசிங், கடந்த 2-ம் தேதி மாயமானார். கடந்த 4-ம் தேதி அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது சடலத்தை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து உவரி போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கை திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் தலைமையிலான 10 தனிப்படைகள் விசாரித்து வருகின்றன.

ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், கடந்த பல நாட்களாக நடைபெற்று வரும் விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை. ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தே போலீஸாரால் இன்னும் முடிவுக்கு வர முடியவில்லை.

இதற்கிடையே ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டு 20 நாட்களை நெருங்கிவிட்டது. 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும், விசாரணையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி அதிகாரியாக ஆய்வாளர் உலகராணி என்பவரை நியமனம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in