தமிழகத்துக்கு வரும் நீரை தடுக்க முயலும் கேரளா: முதல்வர் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வேண்டுகோள்

கேரளா மாநிலத்துக்குட்பட்ட சிலந்தி ஆற்றின் குறுக்கே வேகமாக நடை பெற்றுவரும் அணை கட்டுமானப் பணி
கேரளா மாநிலத்துக்குட்பட்ட சிலந்தி ஆற்றின் குறுக்கே வேகமாக நடை பெற்றுவரும் அணை கட்டுமானப் பணி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்துக்கு வரும் நீரை தடுக்கும் முயற்சியில் கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தேர்தல் கூட்டணி ஆதாயத்துக்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் அடகு வைத்துக்கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில் அம்மாநில அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in