கோப்புப்படம்
கோப்புப்படம்

மே 21-ம் தேதி வரை அதிகனமழை நீடிக்க வாய்ப்பு: இன்றும், நாளையும் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்

Published on

சென்னை: தமிழகத்துக்கு இன்றும், நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் வரும் 21- ம் தேதி வரை அதிகனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிகபட்சமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் 17 செமீ மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்துக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வரும் 22-ம் தேதி தமிழகத்தை ஒட்டி தென் மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து 24-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 24-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (19-ம் தேதி) தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

20-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்களோடு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இதன்படி, தமிழகத்தில் 19 முதல் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகனழையும், 22-ம் தேதியில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in