Published : 25 Apr 2018 09:39 PM
Last Updated : 25 Apr 2018 09:39 PM

ராயப்பேட்டையில் பரிதாபம்: 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த ஹோட்டல் ஊழியர் பலி

ராயப்பேட்டையில் தனியார் நடசத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர் ஏசி வேலை பார்த்தபோது 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார்.

ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமணி தெருவில் வசிப்பவர் சத்யேந்திரன் (48). இவரது மகன் கிஷோர் (19). இவர் கதீட்ரல் சாலையில் உள்ள பிரபல நடசத்திர ஹோட்டலில் ஊழியராக கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்தார்.

இன்று வழக்கம் போல் கிஷோர் வேலைக்குச் சென்றுள்ளார். மதியம் 3 மணி அளவில் 3-வது மாடியில் ஏசி பிளாண்ட் வேலை செய்ய மேலே ஏறிச் சென்றுள்ளார்.

வேலை செய்துகொண்டிருக்கும் போதே திடீரென கால் நழுவி 3-வது மாடியிலிருந்து கிஷோர் கீழே தவறி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் கிஷோரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.

ஆனால் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தனியார் மருத்துவமனையில் கூறியதை அடுத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

உரிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் மூன்றாவது மாடிக்கு ஊழியர் ஏன் சென்றார் என்பது குறித்தும், விபத்து குறித்தும் ராயப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x