Published : 05 Apr 2018 08:15 AM
Last Updated : 05 Apr 2018 08:15 AM

சசிகலா தரப்பின் குறுக்கு விசாரணைக்காக ஏப். 6, 7-ல் ஆஜராக 11 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்ய 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சில சாட்சிகள் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தனர். அது குறித்து சசிகலா பதில் அளிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தோர் மற்றும் அவர்கள் அளித்த சாட்சி விவரங்களை அளிக்க வேண்டும். அந்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதன் பின்னரே, சசிகலா பதில் அளிக்க இயலும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர், விசாரணை ஆணையத்தில் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, சாட்சி விவரங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் வழங்கியது. சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 28-ம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா ஆகியோரிடம் சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறுக்கு விசாரணையில் பங்கேற்க மேலும் 11 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் நாளை (ஏப். 6-ம் தேதி), மருத்துவர்கள் ஆர்.முத்துசெல்வம், பி.கலா, பிரிட்டோ, பி.தர்மராஜன், பி.பாலாஜி, எம்.என். சங்கர் ஆகிய 6 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜராக உள்ளனர்.

7-ம் தேதி ஜெ.தீபக், மருத்துவர்கள் எம்.கே. முரளிதரன், எஸ்.தினேஷ் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன், ஐஏஎஸ் அதிகாரி ராம மோகனராவ் ஆகிய 5 பேர் ஆஜராக உள்ளனர். சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x