Published : 10 Apr 2018 11:11 AM
Last Updated : 10 Apr 2018 11:11 AM

தமிழக கோயில்களில் முறைகேடுகள்: நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களையும் தொடர்ந்து கண்காணித்து, முறையாக நிர்வகித்து செயல்பட இந்து அறநிலையத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களையும் தொடர்ந்து கண்காணித்து, முறையாக நிர்வகித்து செயல்பட இந்து அறநிலையத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழக அரசு - இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களையும் முறையாக கண்காணிக்கவும், தொடர் மேற்பார்வையிடவும், நிர்வாகத்தில் உள்ள குறைகளை கலைந்திடவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

 இதன் காரணமாக, சில கோயில்களின் சொத்துக்கள் மோசடி செய்து விற்கப்பட்டதாகவும், கோயில்களுக்கு சிலை செய்து கொடுப்பதில் முறைகேடுகள் நடந்ததாகவும், கோயில்களுக்கு இலவசமாகவும், நன்கொடையாகவும் வழங்கப்படும் பணம், பொருட்கள் ஆகியவற்றை சரியாக, முறையாக கோயில் நிர்வாகம் பயன்படுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

குறிப்பாக, பழனி முருகன் கோயில் உற்சவர் சிலைக்கு தங்கம் வெளியில் இருந்து வாங்கக்கூடாது என்ற விதியை மீறி தங்கம் பெறப்பட்டிருக்கிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு தங்க விக்ரகம் செய்ததிலும் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

மேலும், திருத்தணியிலும் தங்கத்தேர் செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இப்படி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களுக்கு தங்கத்தேர் தயாரிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி கோயில்களில் முறைகேடுகள் நடைபெறுவதற்கு காரணம் ஆட்சியில் சிரத்தன்மை இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கோயில்களில் சிலை முறைகேடு நடைபெற்றதால் அது தொடர்பான வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டபோது தெரிவிக்கப்பட்ட உண்மைகளையும், தற்போது சிபிசிஐடியின் மூலம் வெளிவரும் உண்மைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும். சிலை கடத்தல் தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதனை துரிதப்படுத்தி, விரைவுப்படுத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் விசாரணை முழுமையாக நடைபெற்று உண்மை நிலை வெளிவந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை கடுமையாக எடுத்து, இனிமேல் கோயில் நிர்வாகத்தில் முறைகேடு நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்து அறநிலையத்துறையின் கடமை.

மேலும், தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களையும் தொடர்ந்து கண்காணித்து, முறையாக நிர்வகித்து செயல்பட இந்து அறநிலையத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x