Published : 29 Apr 2018 08:07 PM
Last Updated : 29 Apr 2018 08:07 PM
ஆர்.கே.நகரில் சித்ரா பவுர்ணமி விழாவில் கலந்து கொள்வதற்காகவும், தண்டையார் பேட்டையில் தண்ணீர் பந்தல் திறப்பதற்காகவும் டிடிவி தினகரன் வருகை புரிந்தார். அப்போது பெண்கள் பலர் 20 ரூபாய் நோட்டைக் காட்டி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்து தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் வரை கொடுக்க திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி அதன் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த சூழலில் தண்டையார் பேட்டையில் முருகன் கோயிலில் நடைபெற்ற சித்ரா பவுர்ணமி விழாவுக்கு தினகரன் வந்தார். அப்போது அவரது காரை வழிமறித்த பெண்கள் 20 ரூபாய் நோட்டு இங்கே, 10 ஆயிரம் ரூபாய் எங்கே என்று கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், காசிமேடு பவர்குப்பத்தில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தினகரன், ''ரூபாய் நோட்டைக் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுசூதனன் ஏற்பாடு செய்த ஆட்கள்தான். நாங்கள் பணம் கொடுப்பதாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT