Published : 13 Apr 2018 01:14 PM
Last Updated : 13 Apr 2018 01:14 PM
ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் தடியடியில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்டோரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடி வருகின்றன.
இந்நிலையில் தமிழகமே காவிரி பிரச்சினையில் போராடி வரும் நேரத்தில் இளைஞர்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்துவதா? என்ற கேள்வியை வைத்து ஐபிஎல் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை மற்றும் நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட பல ஆர்வலர்கள் சென்னையில் ஆவேசப் போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் வாலாஜா சாலை அருகே வந்தபோது கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் இயக்குநர்கள் களஞ்சியம், வெற்றி மாறன், கரூர் ரமேஷ் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். இதில் இயக்குநர் களஞ்சியம் மற்றும் ரமேஷ் ஆகியோர் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள், பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இதில் சில போலீஸாரும், ரசிகர்களும் தாக்கப்பட்டனர். காயம்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களை இயக்கத் தலைவர்கள், போராட்டக்காரர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிவரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சென்னை காவல்துறை ஆணையர் ஏகே.விஸ்வநாதன் இன்று காலை மருத்துவமனை வந்தார்.
மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் இயக்குநர் களஞ்சியம் மற்றும் ரமேஷ் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்கள் போலீஸார் நடத்திய தடியடி பற்றிக் கூறினர். ஆணையருகு நன்றியையும் தெரிவித்தனர்.
பின்னர் மருத்துவர்களிடம் சிறப்பான சிகிச்சை அளிக்க காவல் ஆணையர் கேட்டுக்கொண்டார். காவல் ஆணையரின் இந்த அணுகுமுறை நல்ல முன்மாதிரியான செயல்பாடு என்றும், மனிதாபிமானத்தின் அடையாளமாக காவல் ஆணையர் செயல்பட்டுள்ளார் என்றும் அங்குள்ளவர்கள் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT