

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊழியர் பற்றாக்குறையை களைவதோடு, பேருந்துகளுக்கான உதிரி பாகங்கள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ரா.ஆறுமுகம் விடுத்த அறிக்கை:
இரண்டு கோடி பயணிகள்: அரசு போக்குவரத்துக் கழகங்களில் 19,469 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் மிகவும் பழைய பேருந்துகளாகும். இரண்டு கோடிக்கும் அதிகமான பயணிகள் நாள்தோறும் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
ஒரு பேருந்தை பராமரிக்க குறைந்தபட்சம் ஒரு பராமரிப்பு பணியாளர் தேவை. தற்போதுள்ள பணியாளர் விகிதப்படி, குறைந்தளவிலேயே பணியாளர்கள் உள்ளனர். மேலும் 15 ஆண்டு காலமாக புதிய நியமனங்கள் இல்லை.
எனவே, சாதாரண அடித்தட்டு மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் பொதுத்துறை போக்குவரத்துக் கழகங்களை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ள நிலையில், வரவு செலவு பற்றாக்குறைக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
காலாவதியான பேருந்துகளை மாற்ற வேண்டும். ஊழியர் பற்றாக்குறையை போக்க வேண்டும். தேவைக்கேற்ப உதிரி பாகங்களை வழங்க வேண்டும். இதன்மூலம் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கான நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.