Published : 04 Apr 2018 02:42 PM
Last Updated : 04 Apr 2018 02:42 PM

டெல்லி சென்று திரும்பிய ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு?

டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய ஆளுநரை இன்று மாலை முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. மாநில அரசும் இதோ அதோ என்று நாள் கடத்தியதில் 6 வார காலக்கெடு முடிந்தது. மத்திய அரசு கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு வினாக்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு, அரசியல் அழுத்தம் காரணமாக மத்திய அரசு மனுத்தாக்கல் செய்த பின்னர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது. இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டம் வெடித்தது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளொரு போராட்டம் அறிவித்துள்ளன. நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளன.

வரும் 15-ம் தேதி சென்னை வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டவும் முடிவெடுத்துள்ளனர். போராட்டம் வலுத்து வருவதை ஒட்டி தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறைச்செயலாளரை அழைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார்.

சில நாட்களுக்கு முன் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை ஆளுநர் அழைத்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை குறித்த விவரங்களோடு டெல்லி சென்ற ஆளுநர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரைச் சந்தித்தார். ஆளுநரை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சந்தித்துப் பேசினார்.

நேற்று சென்னை திரும்பினார் ஆளுநர். அதிமுக சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று மாலை தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார் என்ற தகவல் தலைமைச் செயலக வட்டாரத்தில் நிலவுகிறது. மாலை 7 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் அழைத்து முதல்வர் செல்கிறாரா? அல்லது முதல்வரே சந்திக்க செல்கிறாரா என்பது தெரியவில்லை.

தமிழகத்தில் போராட்ட சூழ்நிலையை கருத்தில்கொண்டு மத்திய அரசின் மூலம் மாநில அரசுக்கு வழிகாட்டுதல் எதுவும் தரப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x