Published : 11 May 2024 09:01 PM
Last Updated : 11 May 2024 09:01 PM

சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி கிராமம் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படைப் பிரிவு காவலர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், தாமரைப்பாடி கிராமம் திண்டுக்கல் – திருச்சி நெடுஞ்சாலையில் இன்று (11.05.2024) பகல் 12.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடியைச் சேர்ந்த ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் விக்னேஷ்குமார் (Grade-2 PC 260) வயது 32.

அவர் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனமும், நான்கு சக்கர சரக்கு வாகனம் ஒன்றும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த காவலர் விக்னேஷ்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் ஆயுதப்படைப் பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் விக்னேஷ்குமார் அவர்கள் உயிரிழந்துள்ளது தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

காவலர் விக்னேஷ்குமார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x