Published : 10 May 2024 08:47 PM
Last Updated : 10 May 2024 08:47 PM

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் தனிப்படை சோதனை - நடந்தது என்ன?

கோப்புப்படம்

சென்னை: காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் மதுரவாயல் வீடு மற்றும் தி.நகர் அலுவலகத்தில் தேனி மாவட்ட தனிப்படை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சவுக்கு சங்கர் தனது காரில் கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்த பின்னர், சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் வழக்கு பதியப்பட்டது. மேலும், தேனியில் அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் மே 8-ம் தேதியன்று தேனி கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக, மதுரையில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், மீண்டும் கோவை அழைத்து வரப்பட்டு, மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.

வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை: இந்நிலையில், சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி மாவட்ட போலீஸார் சோதனை நடத்தினர். மதுரவாயலில் அமைந்துள்ள அவரது வீட்டிலும், தி.நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் சென்ற தேனி மாவட்ட போலீஸார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

சவுக்கு சங்கரின் இல்லம் மற்றும் அலுவலகத்தில், கஞ்சா ஏதாவது பதுக்கப்பட்டுள்ளதா? கஞ்சா வியாபாரிகள் உடன் சவுக்கு சங்கர் தொடர்பு வைத்துள்ளரா? அது தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீஸார் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

6 பேர் கொண்ட தனிப்படை: சுமார் 6 பேர் கொண்ட தேனி தனிப்படை போலீஸார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். தி.நகரில் உள்ள சவுக்கு சங்கரின் அலுவலகத்துக்கு போலீஸார் சோதனையிட வந்தபோது, அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. சாவியைப் பெற்று அலுவலகத்தில் சோதனையிட போலீஸார் முயற்சித்தனர். ஆனால், அது முடியாமல் போகவே, அலுவலக கதவின் பூட்டை உடைத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேனி தனிப்படை போலீஸார் சோதனை மேற்கொண்ட சம்பம் அந்தப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x