Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM

மாடுகளை தார்பாயால் மறைத்து கொண்டு சென்ற 11 லாரிகள் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு அடிமாடுகள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன. மாடுகளைக் கொண்டு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும், அதை மீறி லாரிகளில் அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பல மாடுகள் நெரிசலில் சிக்கி வழியிலேயே இறக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியைச் சேர்ந்த அமீன் (27) என்பவர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் இருந்து லாரிகளில் மாடுகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார். இந்த மாடுகள் மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சாந்தகுமார், பஜ்ரங்தள மாவட்ட அமைப்பாளர் தேவராஜ், பசுமை பாதுகாப்பு படை நிர்வாகிகள் சேதுமாதவன், கிரண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே மாடுகளை ஏற்றி வந்த 11 லாரிகளை சிறைபிடித்தனர்.

லாரிகளில் அளவுக்கு அதிகமாக மொத்தம் 196 மாடுகள் ஏற்றப்பட்டிருந்தன. மேலும், மாடுகள் மீது சரக்கு லோடுகளை மூடுவதுபோல் தார்பாய் போட்டு மூடி கொண்டு சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து 11 லாரிகளும் மாடுகளுடன் சிப்காட் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்து அமீன் உட்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x