Published : 10 May 2024 04:21 AM
Last Updated : 10 May 2024 04:21 AM

நாய்களால் ஏற்படும் பாதிப்புக்கு உரிமையாளரின் அலட்சியமே காரணம்: விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மே 5-ம் தேதி ராட்வைலர் வகைவெளிநாட்டு நாய்கள் சிறுமியையும், தாயையும் கடித்துக் குதறின. இதற்கிடையில் நேற்று முன்தினம் ஆலந்தூரில் காவலர் குடியிருப்பிலும் வெளிநாட்டு நாய் ஒன்று சிறுவனைக் கடித்துள்ளது. சென்னை போன்ற மாநகரங்களில் நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

மூர்க்கத்தனமான 23 வகை வெளிநாட்டு நாய்களை, இறக்குமதி செய்து வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்யவும் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் தடை விதித்திருந்தது. அந்த பட்டியலில், ராட்வைலர், பிட்புல் அமெரிக்கன் புல்டாக்உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த தடைக்கு தற்போதுசென்னை உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளன.

வெளிநாட்டு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் கிரண் ராவ் கூறியதாவது: வெளிநாட்டு நாய்கள் வளர்ப்பு முறை, அந்த நாய்கள் வளர்ந்தால் நம்மிடம், பிறரிடம் எப்படி நடந்துகொள்ளும் என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை. அதைக் கையாளும் உடல் பலம், திறன் பெற்றிருப்பதில்லை. நாய்களைப் பராமரிப்பதில் உரிமையாளர்கள் காட்டும் அலட்சியமே பொதுமக்களை பாதிக்கிறது.

ராணுவம் உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவுகளில் உள்ள பயிற்சி பெற்ற நாய்கள் யாரையும் கடிப்பதில்லை, அச்சுறுத்துவதும் இல்லை. அப்படி பயிற்றுவித்து வளர்க்கவசதியும், திறனும் அற்றவர்கள் வெளிநாட்டு நாய்களை வளர்க்கவே கூடாது. நண்பர்களுக்கு விலை உயர்ந்த வெளிநாட்டு நாய் குட்டிகளை பரிசாகக்கொடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வணிகம், பணம் சம்பாதிக்கும் நோக்கில் விதிகளை மீறி வெளிநாட்டு இனங்களை இனப்பெருக்கம் செய்து விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்தாளரும், விலங்குகள் நல செயற்பாட்டாளருமான மமதி சாரி கூறியதாவது: விலங்குகள் மீது பாசம் கொண்டு நாய்களை வளர்க்கும் காலம் போய், சமுதாயத்தில் தங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்வதற்காக விலை உயர்ந்த, மரபணு கலப்பற்ற வெளிநாட்டு நாய்களை வளர்க்கும் பழக்கம் மக்களிடம் உள்ளது. வெளிநாட்டு நாய்களை, 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும் தமிழகத்தில் வளர்ப்பது,அவற்றை கொடுமைப்படுத்துவதற்கு சமம்.

நாய்கள் ஆக்ரோஷமாவதும், ஆட்டுக்குட்டியாவதும் நம் வளர்ப்பில் தான் உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், விதிகளுக்கு உட்பட்டு, பாதுகாப்பாக வளர்க்க முடியாதவர்கள், எந்த ஒருநாயையும் வளர்க்கக் கூடாது.நாய்களை வளர்க்க விரும்புவோர் தெரு நாய்களைப் பாதுகாப்பாக வளர்க்கலாம். ஒவ்வொருவரும் ஒரு நாய்க்குக் கருத்தடை செய்ய நிதியுதவி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் மாநகராட்சியின் உரிமம் பெற்று,அவற்றுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இதற்காக சிறப்பு முகாம்களை நடத்த இருக்கிறோம். பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி, முகக் கவசம் அணிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிகளை மீறுவோர் தொடர்பாக மாநகராட்சியின் 1913என்ற தொலைபேசி எண்ணில்பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். பொது இடங்களில் ஒருவர்ஒரே ஒரு நாயை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.மாநகராட்சியின் உரிமம் பெற்றநாய்கள் மட்டுமே பூங்காக்களுக்குள் அனுமதிக்கப்படும். பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும் பகுதிக்குச் செல்லஅனுமதி இல்லை. இவ்விதிகளை மீறினால் அந்த நாயின் உரிமையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மாமன்ற அனுமதி: நாய்கள் கடிப்பது தேசிய அளவிலான பிரச்சினை. தற்போதுள்ள சட்டங்களின்படி வளர்ப்பு பிராணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. அதனால் கருத்தடை நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளின் உரிமம் இன்றி நாய்களைவளர்த்தால் அபராதம் விதிக்கமாமன்ற அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டு நாய்களை வெயில் சுட்டெரிக்கும்போது தமிழகத்தில் வளர்ப்பது, அவற்றை கொடுமைப்படுத்துவதற்கு சமம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x