1,303 ஆதிதிராவிட மகளிர், இளைஞர்கள் தொழில் முதலாளிகளாகி சாதனை

1,303 ஆதிதிராவிட மகளிர், இளைஞர்கள் தொழில் முதலாளிகளாகி சாதனை
Updated on
1 min read

சென்னை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் புதிய சாதனையாக, தமிழகத்தில் 1,303 ஆதிதிராவிட மகளிர், இளைஞர்கள் தொழில் முதலாளிகளாக உருவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” எனும் புதிய திட்டத்தை கடந்த 2023 – 24 மே மாதம் அறிவித்து, ரூ.100 கோடி ஒதுக்கினார்.

பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தொழில் முதலீட்டில் 35 சதவீத தொகை அரசு மானியமாக கிடைக்கும். அத்துடன் 65 சதவீத, மூலதன தொகைக்குரிய வங்கிக் கடனுக்கான வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்து மாவட்ட, கிராம அளவில் ஆதிதிராவிட, பட்டியலின மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் பலனாக, பட்டியலின, பழங்குடியின இளைஞர்களிடம் இருந்துதொழில் தொடங்க, இணையதளம் வாயிலாக 12,472 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 7,365 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

வங்கி கடன் அனுமதி: ஆதிதிராவிட இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், கடந்த நிதியாண்டில் மிகவும் குறுகிய காலத்தில் 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன், இணையம் வழியாக நிதி மேலாண்மை, வர்த்தக யுக்திகள், வரவு செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின்கீழ் தொழில் முனைவு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. 1,303 தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக மட்டும் ரூ.159.76 கோடி வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் ரூ.33.09 கோடியை மானியமாக பெற்றனர்.

இந்த அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவியுடன் வங்கிக் கடன்கள் பெற்று ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்கள் பலர், பல்வேறு தொழில்களைத் தொடங்கி தொழில் முதலாளிகள் ஆகியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in