Published : 10 May 2024 04:06 AM
Last Updated : 10 May 2024 04:06 AM

பழனிசாமி குறித்த தனிப்பட்ட விமர்சனம்: ஆர்.எஸ்.பாரதிக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

ஆர்.பி.உதயகுமார்

மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து தனிநபர் விமர்சனம் செய்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பால் விலை, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் திணறி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத் தவிர, புதிய திட்டங்கள் ஏதேனும் கொண்டுவரப்பட்டதா? இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்காத நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மீது தனி நபர் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக கடந்த சட்டபேரவை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், 3 ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கர்நாடகாவில் தங்களது குடும்ப தொழில்களைப் பாதுகாக்க, திமுக தலைவர் காவிரியில் தமிழகத்துக் குரிய பங்கு நீரைப் பெறாமல் டெல்டா மாவட்ட விவசாயிகளை வஞ்சிப்பதைப் பற்றி பேச ஆர்.எஸ்.பாரதி தயாரா?

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. தமிழகம் போதைப் பொருள் விற்பனை கேந்திரமாக மாறியுள்ளது. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, பழனிசாமி குறித்து ஆர்.எஸ்.பாரதி தனிநபர் விமர்சனம் செய்துள்ளார். நாங்கள் தனிநபர் விமர்சனம் செய்தால் திமுக தாங்காது எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x