Published : 09 May 2024 07:21 PM
Last Updated : 09 May 2024 07:21 PM

வெப்ப அலை: அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க நடவடிக்கை

சிவ் தாஸ் மீனா | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதால் சிறுவர், சிறுமியரின் நலன் கருதி கோடைவிடுமுறை நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்த்திட வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்துக்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில், குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச் முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழகத்தின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே எனது தலைமையிலும், கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், எதிர்வரும் மே 16ம் தேதி முடிய தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 36 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது.

வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x