Published : 09 May 2024 04:00 AM
Last Updated : 09 May 2024 04:00 AM

கிருஷ்ணகிரியில் கொட்டிய மழை: தே.கோட்டை அருகே மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி சிட்கோ பூங்காவில் பலத்த காற்றுக்கு வேருடன் சாய்ந்த மரம். (அடுத்த படம்) காவேரிப்பட்டணத்தில் பலத்த காற்றுக்கு சாய்ந்து விழுந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின் ஊழியர்கள்.

கிருஷ்ணகிரி / ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பல்வேறு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், தேன்கனிக்கோட்டை அருகே மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் வழக்கத்தை விட கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் சாலைகளில் வெப்பக் காற்று வீசி வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரிரு நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், இரவில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

வேருடன் சாய்ந்த மரங்கள்: இதனிடையே, நேற்று அதிகாலை 2.30 மணி அளவில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், தேன்கனிக் கோட்டை, ராயக்கோட்டை, நெடுங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் பலத்த மழையும் சில இடங்களில் சாரல் மழையும் என ஒன்றரை மணி நேரம் நீடித்தது.

இதில், கிருஷ்ணகிரி சிட்கோ பூங்கா உள்ளிட்ட சில இடங்களில் காற்றுக்கு மரங்கள் வேருடன் சாய்ந்தன. கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், பர்கூர் உள்ளிட்ட பகுதியில் மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பம், மின் ஒயர்கள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், இப்பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

சாக்கடை கால்வாயில் அடைப்பு: அதிகாலை முதலே மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இப்பகுதியில் காலை 10 மணிக்கு மேல் மின் விநியோகம் சீரானது. இதேபோல இணையதள சேவைகளும் பாதிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி நகராட்சி ரவுண்டானா பகுதியில் சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, மழை நீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து தேக்கி துர்நாற்றம் வீசியது. நேற்று காலை நகராட்சி ஊழியர்கள் சாக்கடை கால்வாய் அடைப்பைச் சரி செய்தனர்.

மேலும், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், நேற்று காலை நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள வந்த மாணவ, மாணவிகள் சிரம்த்துக்குள்ளாகினர். இதனிடையே, நேற்று பகலில் வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகமாக இருந்தது.

கிருஷ்ணகிரி அணையில் 93 மிமீ பதிவு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: கிருஷ்ணகிரி அணை 93, நெடுங்கல் 53, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரியில் தலா 25, பாரூர் 19, போச்சம்பள்ளி 10.6, கெலவரப்பள்ளி அணை 5.2, பெனுகொண்டாபுரம் 2.3 மிமீ மழை பதிவானது.

தேன்கனிக்கோட்டை அருகே சின்னகோடிப்பள்ளியைச் சேர்ந்தவர் லோகேஷ் (45). இவர் நேற்று காலை அஞ்செட்டியிலிருந்து தேன்கனிக் கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள அந்தேவனப்பள்ளிக்கு அவர் வந்தபோது, அங்குள்ள கடையில் டீ குடிக்க இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அப்போது, அப்பகுதியில் சாலையோரம் இருந்த பழமையான அரசமரத்தின் ஒரு பகுதி முறிந்து லோகேஷ் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது விழுந்தது.

வலுவிழந்த அரச மரம் முறிவு: இதில், நிகழ்விடத்திலேயே லோகேஷ் உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை போலீஸார், லோகேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு அரசமரம் வலுவிழந்த நிலையில் ஒரு கிளை பகுதி முறிந்து விழுந்தது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x