Published : 09 May 2024 05:51 AM
Last Updated : 09 May 2024 05:51 AM

வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு: ஓரிரு நாளில் சரிசெய்ய நடவடிக்கை

திருவள்ளூர்: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கொதிகலன் குழாய் பழுதால் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த அனல் மின் நிலையத்தில் உள்ள முதல் நிலையின் 3 அலகுகளில் 630 மெகாவாட், 2-வது நிலையின் இரு அலகுகளில் 1,200 மெகாவாட் மற்றும் 3-வது நிலையில் 800 மெகாவாட் என, 2,630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தின் முதல் நிலையின் 3-வது அலகில் நேற்று காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

அதே போல், 2-வது நிலையின் 2-வது அலகில் திடீரென கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. ஆகவே, அந்த இரு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கொதிகலன் குழாய் பழுதை சரி செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்பணி ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் என, அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x