Published : 09 May 2024 06:05 AM
Last Updated : 09 May 2024 06:05 AM

தமிழகத்துக்குள் போதைப் பொருட்கள் வருவதற்கு மத்திய முகமைகளின் தோல்வியே காரணம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: வெளிநாடுகளில் உற்பத்தியாகும் போதைப் பொருட்கள் தமிழகத்துக்குள் வருவதற்கு, மத்திய பாதுகாப்பு முகமைகளின் தோல்வியே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஒரு பிரதமர் நாட்டுக்கும், மக்களுக்கும் நம்பிக்கைக்கு உரியதலைவராக இருக்க வேண்டும். கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் மக்களவையில் விவாதிக்க முடியாது என்று கூறும் மத்திய அரசு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மட்டும் அதுதொடர்பான ஆவணங்களை எப்படி கொடுத்தது.

தகவல் அறியும் சட்டத்தின்கீழ் அண்ணாமலைக்கு இந்த ஆவணங்களை கொடுத்ததாக ஓர் அதிகாரி கையெழுத்திட்டுள்ளார். அவர் வெளியுறவு துறையில் பணியிலேயே இல்லை. பொய்யான தகவலை அண்ணாமலை வெளியிடுகிறார். அதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சர் பேசுகிறார். பிரதமர் அந்த கருத்தைசமூக வலைதளத்தில் பகிர்கிறார். இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடர உள்ளோம்.

சும்மா இருக்க முடியாது: வெளிநாடுகளில் உற்பத்தியாகும் போதைப் பொருட்கள் தமிழகத்துக்குள் வருவதற்கு, மத்திய பாதுகாப்பு முகமைகளின் தோல்வியே காரணம். தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் வருவதை அவர்கள்தான் தடுக்க வேண்டும். அதானி துறைமுகம் வழியாகத்தான் போதைப் பொருட்கள் உள்ளே வருகின்றன.

தமிழக இளைஞர்கள் போதைபழக்கத்துக்கு அடிமையாவதைபார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. அதன் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருக்கு எதிராக மனு: இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில் செல்வப்பெருந்தகை தாக்கல் செய்த மனுவில், ‘இந்ததேர்தல் பிரச்சார்த்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை பாஜகவினர் கட்டவிழ்த்துவருகின்றனர். மத நல்லிணக்கத்துக்கும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கவும், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார்.

அப்போது பிரதமருக்கு எதிராகஇந்த வழக்கை தொடர்ந்துள்ளதால் பதிவுத்துறை ஏற்க மறுப்பு தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். இதையடுத்து குறைகளை சரிெசய்து புதிய மனுதாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x